Saturday, October 1, 2011

எங்கேயும் எப்போதும் – திரை விமரிசனம்

எல்லா விபத்துக்களின் பின்னாலும் ஒரு இழப்பு, சோகம், துக்கம் யாவும் மண்டித்தான் கிடக்கும். இப்படத்தில்,  நீளமாக விவரிக்கப்படும் ஒரு விபத்து எப்படி ‘காதலையும்குடும்பத்தினையும், பாசப் பிணைப்பினையும் புரட்டிப்போட்டு சின்னா பின்னமாக்கிவிடுகிறது என்பதை விவரிக்கும் படம்.

இப்படத்தில், சம்பிரதாயமான “கதை முடிச்சு என்று, ஏதும் இல்லை. இக்கதை சொல்லப்பட்ட முறை Narration Type’ .  அதாவது எதிர்பாரா திருப்பம்-திடுக்கிடல் ஏதும் இல்லா, ஒரு சுவையான டாகு மென்டரி.

மூன்று காதல் ஜோடிகள். அனன்யா-சர்வா, ஜெய்-அஞ்சலி, மற்றும் ஒரு காலேஜ் காதல் ஜோடி.

சிறிய நகர (திருச்சி) அனன்யாவுக்கு சென்னை நகர சர்வாவிடம் ஈர்ப்பு.  நகரத்து அஞ்சலிக்கு, கிராமத்து ஜெய்யிடம் காதல். 

இவர்கள் யாவரும் ஒரு விபத்தில் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.

யார் பிழைத்தார்கள் என்பதை திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்!

அனன்யா தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்திற்கு ஏற்றாற்போல நடித்திருக்கிறார்.  குறிப்பாக சென்னைத் தெருக்களையும், மக்களையும் மிரட்சியோடு பார்ப்பது, தனது ‘அட்ரஸ்-வழிகாட்டியை நம்பியும்- நம்ப முடியாமலும் – உணர்ச்சிகளை கண்களில் காட்டுகிறார். இந்த கேரக்டரில் மட்டும், மிக லேசாக அந்த காலத்து பாலச்சந்தர் படவாசனை இருக்கிறாற் போல உள்ளது. இந்தக் காலத்திய B.E  (92%) படித்தபெண், இவ்வாறு கொஞ்சம், பத்தாம் பசலியாக இருப்பது, லேசாக இடிக்கிறது.

மாறாக அஞ்சலி, ஜெய்யிடம் கலாய்க்கிறார். அஞ்சலியின் இந்த தடாலடி அப்ரோச் ரசிக்கும்படி, இருக்கிறது. 

படத்தின் திரைக்கதை அமைப்பு பிரமாதம். திருப்பங்களும்-முடிச்சுகளும் சாத்தியமற்ற ஒரு கதைக்கு, இதைவிட சிறப்பாக திரைக்கதை அமைக்க முடியாது!

நடிப்பில் அனைவரும் அசத்துகின்றனர்.
அனன்யா கண்களால்;
அஞ்சலி வார்த்தைகளால்;
சர்வா மிடுக்கால்-தோற்றத்தால்-இயல்பான நடிப்பால்; 
ஜெய் அஞ்சலியிடம் அடக்கி வாசிக்கும் தொனியிலும்-பம்முவதிலும்;
அனன்யாவின் அக்கா நடிப்பு கூட இயல்பு.


வெளிநாட்டு வேலையில் இருந்துவிட்டு, இதுவரை பார்த்திராத மகளை பார்க்க விரையும் தந்தை. 


புதுத்திருமன ஜோடிகளின் காதல் பயணம், 
அரசூர் ஊர்ப்பெரியவர், 
காதலுடன் பயணிக்கும் மாணவன் - மாணவி - என எல்லா பாத்திரங் களையும் கவனத்துடன் உருவாக்கியிருக்கிறார் டைரக்டர். 

முக்கியமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ஒளிப்பதிவு.  GST சாலையில் பஸ்களின் விரைவு ஓட்டம், ஓவர் டேக் ஆகியவற்றை, துல்லியமாக, திகிலூட்டும் விதத்தில், நமக்கு படபடப்பை ஏற்படுத்தி,  ஒரு விபத்தினை எதிர்பார்க்கும் மன நிலைக்கு தயாராகும்படி, படமாக்கியுள்ளார். சில சமயங்களில் கேமிராவே கதை சொல்லி விடுகிறது.   

சின்ன சின்ன விஷயங்களில் எல்லாம், கேமிரா கவனம் செலுத்தி யுள்ளது. அனன்யா ப்ப்ளிக் பூத்தில் டயல் செய்யும் போனில்  தெரியும் BSNL’  Logo,    அனன்யா பூ வாங்குவது, பின் அது விபத்தில் நசுங்கிக் கிடப்பது, பஸ்களுக்கு டீஸல் பிடிப்பது, இறுதிக் காடசியில், விபத்துக் குள்ளான பஸ்கள், கிரேனால்  பின்னால் இழுக்கப்பட்டு, சாலையோர இரத்தக் 
கறைகள் -
பஸ் டயர்களினால் மறைவது- என பல காட்சிகள், நேர்த்தியிலும் நேர்த்தி. 


ஒளிப்பதிவாளார் வேல்ராஜூக்கு சபாஷ்.

சத்யாவின் இசை ‘மெலடி வகையைச் சார்திருப்பது – காதுகளுக்கு அமைதி  தருகிறது.

குறை சொல்ல முடியா எடிட்டிங்.


 இயக்குநர் சரவணன் நம்பிக்கைக்குரிய வரவு என்றால், மனதைத் தொடுகிறது வேல்ராஜின் கேமிரா.

முதல் அரைமணி நேரத்திலேயே கதையின் பரபரப்பு முடிந்து விடுகிறது.

இப்போது சென்னையிலிருந்து திருச்சி வரை நான்கு வழிச்சாலை போடப்பட்டுள்ள காலத்தில், நேருக்கு நேராக பஸ்கள் மோதிக் கொள்ளும் வாய்ப்பு மிக்க் குறைவு (வேண்டுமென்றே ராங் சைடில் வந்தாலொழிய) என்ற லாஜிக்கை மறந்துவிட வேண்டும். 

அது போல, கடைசி அரைமணி நேரம், அந்த கோர விபத்தை, இவ்வளவு விஸ்த்தாரமாக, இவ்வளவு ரணகளமாக காட்ட வேண்டியதன் அவசியம் புரியவில்லை. எப்படியாயினும் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து, வண்டியை எடுக்கும் போது, படம் பார்த்த்தின் விளைவாக அச்சமும், திகிலும் ஏற்படுவதையும், அதனால் எச்சரிக்கையுடன் வண்டி ஓட்டி வந்ததையும் மறுக்க முடியாது.

இந்த உணர்வு நெடுஞ்சாலைகளில், வண்டிகளை இயக்கும் அனைத்து ஒட்டுனர்களுக்கும் வந்தால் நல்லது.

No comments:

Post a Comment