Saturday, October 1, 2011

பார்வை ஒன்றல்ல ...

பார்வை ஒன்றல்ல ...


"தே.. எந்திரி.. என் நேரம் தூங்குவே? "


"நாயித்துக் கெளமே தானே.. லேட்டா ஏஞ்ச்சா என்னாவாம்?"


"பல்லவெளக்கிட்டு டீத்தண்ணிய குடி.  உஸ்மான் கடைக்கு போய் அரைக் கிலோ கறி வாங்கியா.. அப்புறம் போனியானா கொடலுதான் கெடைக்கும்..."


ஞாயிற்றுக்கிழமைகளில் செல்வத்துக்கு கறி வேண்டும். அதற்காகத்தான் அவனை விரட்டிக் கொண்டிருந்தாள்  மனைவி அமுதா. 


அமுதா செய்யும் கறிசோற்றின் பக்குவம், அவனது தூக்கத்தை விரட்டியது.
'அஜந்தா' பிரஷில் கோல்கேட்டை பிதுக்கியபடி, "டீ  போட்டாச்சா ?'


"மொதல்ல பல்ல வெளக்கி முடி.. டீ வரும்"


"உன்னோட "டீ" க்காகவும், கறி சோத்தின் ருசிக்காகவும் தான் உன்னை வெச்சுக்கிட்டிருக்கேன்.. இல்லாங்காட்டி, உன்னை ஆத்தா வூட்டுக்கு என்னைக்கோ அனுப்பி வெச்சிறுப்பேன்"


"பெரிய கலக்டர் உத்தியோகம் பாக்குறா.. வெரட்டி விட்டுருவாரம்ல...உன்னோட காரு மெக்கானிக்குக்கு வேலக்கு சீதேவியும், த்ரிஷாவுமா கெடப்பாங்க.. நான் கட்டிகலேன்னா, நாய் கூட ஒன்னை சிந்தாது தெரிஞ்சுக்கோ..."


"இங்க பார்ரா கோவத்த... சொம்மனாச்சும் சொன்னேன்..."


"எல்லாம் எனக்குத் தெரியும் போய்யா.. சீக்கிரமா போய கறி வாங்கியா..."


"அர அவர்ல வந்தூடரேன்.."   டி.வி.எஸ் ஸை எடுத்தான் செல்வம். 


 "நான் வர்ரதுக்குள்ள 'பட்டரை துணிக்கெல்லாம் சொப்பு போட்டு வச்சுடு.. வந்து துவைக்கிறேன்."


பட்டரை டிரஸ் என்பது, செல்வத்தின் "ஆபீஸ் ட்ரஸ்".  


பிசுக்கு, கிரீஸ், கரி, அழுக்கு எல்லாம் கலந்த, ஒரு காலத்தில் காக்கி நிறத்தில் இருந்த பேண்டும், கருப்பு 'T'  ஷர்ட்டும். 


செல்வம்  "JPகார் கிளினிக்" எனப்படும் 'கார் ரிப்பேர் ஷெட்'டில் சீனியர் மெக்கானிக். போக்கடாத்தனமும், தெனாவெட்டுமாக திரிந்தாலும் இவனது திறமைக்காகவே வேலைக்கு வைத்திருந்தார்  ஓனர் பிரகாஷ்.  கிராமமும் அல்லாது நகரமும் அல்லாத "ஆத்தூரில்" இந்த 'வொர்க் ஷாப்' வெகு பிரசித்தம். இந்த புகழுக்குக் காரணகர்த்தா செல்வம். பட்டரைக்குள் வண்டிகள் வரும்போதே இன்ஜின் சத்தத்தை வைத்து "ரிப்பேரை" கண்டுபிடித்துவிடுவான்.  ஆச்சர்யனாக, கெட்ட பழக்கம் ஏதுமில்லாதவன்.  அப்படி இல்லாவிட்டால் இவனை 'கட்டிக் கொள்வாளா' அமுதா?  கல்யாணமாகி ஆறு மாதம் ஆகிறது. பிரகாஷிடம் சொல்லிவடாதீர்கள். 'அமுதா கார் கிளினிக்' என்று தனியாக வொர்க் ஷாப் வைக்க கணவு கண்டு கொண்டிருக்கிறான்.  


இரவு எட்டு மணியிலிருந்து காலை 'ஆபீஸுக்கு'  போகும் வரையிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் அமுதாவின் பின்னால் பூனைக்குட்டி போல செல்வம் சுற்றுவதில் அமுதாவுக்கு ஏக பெருமை.


----


"JPகார் கிளினிக்" ஓனர் பிரகாஷ், தனது செல்லில் 'முருகானந்தம் காலிங்'  வருவதைக்கண்டு, "அட.. மறந்தே போய்விட்டேன்.   செகண்ட் ஹேண்ட் 'குவாலிஸ்' பார்ப்பதற்கு முருகானந்தத்தை  வரச்சொல்லியிருந்ததை  நினவு படுத்திக் கொண்டார்.  வொர்க் ஷாப்பைத்தவிர 'கார் புரோக்கர்' தொழிலும் உண்டு.   பொருத்தமாக, 'என்ன பொய் சொல்லலாம்' என யோசித்தவாறு ஆன்ஸர் செய்தார். 


'வணக்கம் அண்ணே... அந்த குவாலிஸ் பார்ட்டி இன்னிக்கு ஊரில் இல்லை... பொதன் கிழமைதான் வருவாரம்.. வந்த உடணே சொல்லியனுப்பறேன்.. போய்ப் பாத்துட்டு முடிச்சுடலாம்!'


'முடி.. முடி.. இப்ப நான் கூப்பிட்டது அதுக்கில்ல..  அண்ணாச்சி நேத்திக்கு ராத்திரி மெட்ராசிலிர்ந்து வந்திருக்காரு.. அவரோட புதுக் காரு ஏதோ மக்கர் பண்ணுதாம்.  இன்னும் பதினஞ்சு நிமிஷத்தில பட்டரைக்கு வந்துடரோம்.. சீக்கிரம் பாத்துக் கொடுத்துடு. மத்தியானம்  ரிட்டர்ன் ஆகனுமாம்."


இந்த  'அண்ணாச்சி' எனப்படுபவர் உள்ளூர் முக்கிய அரசியல் பிரமுகர்.  இப்போது எந்த கட்சியில் முக்கியஸ்த்தர்  என்பது, அன்றைய தினசரிகளப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 


"எண்ண வண்டி? என்ன ரிப்பேர்.."


"அது வந்து...'ஆடியோ', 'அவணியோ'. என்னவோ சென்னானே.. ஏம்ப்பா டிரைவரைக் லாரன்ஸைக் கூப்பிடு.."


"சார்... நான் லாரன்ஸ், டிரைவர். இது 'ஆடி' கார் சார். இம்போர்ட்டட்  வண்டி. கிளட்ச் பிளேட் ஸ்ட்டிக்கியா, ஹார்டா இருக்கு ..பிக்கப் குறையுது.. ஹீட் ஆகுது..."


இந்தமாதிரி பிரச்சினைகள தீர்க்கக் கூடியவன் செல்வம் தான். மத்தவங்களை விட்டால் பேர் ரிப்பேராகிடும்.  ஆனால் இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை.. வரமாட்டான்.  இதை முருகானந்தத்திடம் சொல்ல முடியாது.  அண்ணாச்சி  பெரிய மனுஷன். 
சரி..  நாமளே நேரா போய் செல்வத்தை கூட்டியாந்துட வேண்ட்யது தான்.


"நீங்க டிரைவரைப் போட்டு பட்டரைக்கு  காரை அனுப்பிச்சுடுங்க.. பாத்துக் குடுத்துடரேன்..."


அவசரமாக தனது ஹீரோ ஹோண்டாவுக்கு உயிர் கொடுத்து செல்வத்தின் வீடு நோக்கி கிளம்பினார் பிரகாஷ்.


----------


"யே .. புள்ள அமுதா... இந்தா,  இப்பவெல்லாம் கறியைக்கூட பிளாஸ்ட்டிக் பேக்கில் போட்டுத்தருகிறார்கள்.


 "துணிக்கு சோப்பு போட்டு வச்சுருக்கேன்.. ஊறட்டும்.. அப்புறமா தோச்சுக்கலாம்..." கறிப் பையினை வாங்கிய அமுதாவின் வயிற்றில் கிள்ளினான் செல்வம். "ஐய... பெரிய ஹீரோ மாதரி பண்னர?... நேத்திக்கு ராவு முச்சூடும் கிள்ளினது பத்தாதா?"


"எத்தினி வாட்டி கிள்ளினாலும் அலுக்காது புள்ள.."  


"யோவ்...  ஒம் முதலாளி வர்ரான் பாரு...  அவனைக் கவணி. அப்புரமா கிள்ளலாம்..'
செல்வத்தினைத் தேடி வரும் பிரகாஷைப் பார்த்துவிட்டு வீட்டினுள் சென்றாள் அமுதா.


ஞாயித்துக் கெழமைகூட வுடமாட்டிங்கறான்.  எதனாச்சும் வேலை வச்சுருப்பான். இல்லங்காட்டி வீடு தேடி ஏன் வரனும்.


"என்னாங்க காலையில வூட்டுப் பக்கம்?"


சொன்னார் பிரகாஷ்.


"இன்னிக்கு ஒரு நாள்தான் ரெஸ்ட்.. வூட்டு வேலையெல்லாம் பாக்கறதுக்கே டைம் இல்ல.."


"உனக்கு அரை மணி நேரம் போதும் செல்வம்.  பாத்துக் கொடுத்துடு.. அண்ணாச்சி விவகாரம்.  முடியாதுன்னு சொல்லமுடியாதுல்ல.."


ஓ அண்ணாச்சி காரா.. ஆடி கார் அவன் மனதில் ஆடியது.  


நாளைக்கு "தனி பட்டரை" வச்சால் அண்ணாச்சி தயவு வேணும்.  


"சரி.. நீங்க போங்க.. பின்னாடியே வந்தூடரேன்.  "


'வேணாம்.. வேணாம்.. என் வண்டியிலேயே வந்துடு.. அப்புரம் நீ வரமாட்டே.."


"திரும்ப நான் எப்படி வூட்டுக்கு வர்ரது.. நான் டி.வி.எஸ்ஸில் வர்ரேன்.  நீங்க போங்க.."


செல்வம் அவனது வண்டியை கிளப்பும் வரை காத்திருந்து பின் புறப்பட்டார் பிரகாஷ்.


----------




ஓட்டிப் பாத்ததுமே கண்டுபிடித்து விட்டான் செல்வம்.  "ஏம்ப்பா டிரைவர்  ஆஃப் கிளட்ச்சிலேயே ஓட்டிக்கிட்டிருந்தியா?  " 


"இல்லியேண்ணே.. "


"இப்பத்திக்கு பிளேட்டையும், பெடலையும் அட்ஜஸ்ட் பண்ணித் தர்ரேன்.. ரெண்டு, மூணாயிரம் கிலோ மீட்டர் ஓடிடும். நீ என்ன பண்ணு.. மெட்ராஸ் போனதும் கம்பெனியாண்ட வுட்டு சரி பண்ணிக்க. கிளட்சை ஒழுங்கா புடிச்சு ஓட்டு."


'சரிண்ண..'


வேலை முடிந்தது.. செல்வத்துக்கு 200 ரூபாய் கொடுத்தார் பிரகாஷ்.


"அண்ணே  வண்டி ரெடியாயிடுச்சி. டிரைவர் எடுத்துக் கிட்டு வர்ரார்."  என்றார் ப்ரகாஷ், முருகானந்தத்திடம்.


'பரவாய்ல்லையா.. அதுக்குத்தான்யா, உன்னோட வொர்க் ஷாப் கிட்ட வர்ரது.. ஃபாரின் வண்டியாச்சே.. உன்னால பாக்க முடியுமான்னு நினச்சேன். "


'நம்ம கையால முடியாதது ஒன்னுமில்லீங்க.. எல்லாத்தையும் பாத்துடலாம் அண்ணாச்சி..."


சரி, இந்தப் பக்கம் வந்தா வா.. இல்லாட்டி நான் அங்கே வரும் போது உன்னோட "சார்ஜை' கொடுத்துடறேன். 


----------


ஒரு மசிரும் தெரியாது இவனுக்கு. வேலை செஞ்சது எல்லாம் நானு.. இவரு கை பட்டா, எல்லாம் சரிய பூடுமாம்.  இவனெல்லாம் பட்டரைக்கு ஓனர்! வச்சுக்கறேன் பாரு உனக்கு! தனியா நானு பட்டரை போட்டப்புரம் தான் இருக்கு மவனே உனக்கு ஆப்பு.
  - இது செல்வம்.




மெட்ராஸில் புறப்படும் போதே சொன்னேன்.. கிளட்ச் கொஞ்சம் மக்கர் பண்ணுதுன்னு..கேக்கலை இந்தாளு அண்ணாச்சி.  "ஏய்.. இது ஃபாரின் வண்டி.. லட்சம் கிலோ மீட்டருக்கு ஒன்னும் ஆவாது. நீ பொத்திக்கினு ஓட்டு" னுட்டாரு. ஒரு டிரைவர்க்கு தெரியாது வண்டியில என்ன ஃபால்ட்டுன்னு?  இவங்கிட்டல்லாம் வேலை பாக்கனும்னு எந்தலையிலஇருக்கு.  அடுத்த மாசம் சேட்டுக் கிட்ட லோன் போட்டு ஒரு 'அம்பாசிடராவது' வாங்கிப் போடனும்.  கண்ட நாயிகிட்ட எல்லாம் பதில் சொல்ல வேணாமுல்ல..


- இது 'ஆடி டிரைவர் லாரன்ஸ்'




ஒரு கிளட்சை அட்ஜ்ஸ்ட் பண்றதுக்கு 200 ரூவா கொடுக்க வேண்டியதாப் போச்சு செல்வத்துக்கு. முருகானந்தம் எவ்வளவு கொடுப்பானோ தெர்யாது!  இவனை அனுப்பிச்சுட்டு சீக்கிரமா வேற ஒரு  ஆளை  வேலைக்கு அமைச்சிக்கிடனும்.  இவன் ஒருத்தனை நம்புரதுனால தானே வீடு தேடி ஓட வேண்டியிருக்கு. நல்ல ஆளா எவனும் ஆம்புட மாட்டிங்கிறானே? பாப்போம்.


 -  இது பிரகாஷ்.




நானும் அண்ணாச்சி ஊருக்கு வரும்போதெல்லாம், ஏதாவது ஒதவி செஞ்சுக்கிட்டு தான் இருக்கேன். இந்த தடவ வுடக்கூடாது. மெட்ராஸுக்குப் போய்,  ஏதாவது ஒரு கவர்மெண்ட்  காண்ட்ராக்ட் வேலை வாங்கிப்புடனும்.  நாம்பளும் நாலு காசு பாக்க வேணாம்?


--இது முருகானந்தம்.


-----------------


'ஏம்ப்பா லாரன்சு... வண்டிய ஒன்னும் கொடுத்துடலியே, அந்த பய ப்ரகாசு? புது வண்டி,  12 லட்ச்ம்.  எதுக்கும் மெட்ராசுக்கு  போனதும் ஷோரூமில் காட்டிடறியா?


 'அதாங்கய்யா, மெட் ராஸில் பொறப்படும் போதே சொன்னேன். ஊருக்கு போனதும் காட்டிடலாம்"


சரி.. சரி.. நீ ரோட்டைப் பாத்து ஓட்டு.. பத்தரமா வூட்டுக்ப் போவனும். 
பக்கத்தில் இருக்கும் 'சின்ன வீட்டை இழுத்து அணைத்துக்  கொண்டார் 'அண்ணாச்சி'.
----------

No comments:

Post a Comment