Tuesday, January 17, 2012

மனசே, நீ ஒரு ம(ரு)ந்திர சாவி..!

(ஒரு பக்கக் கதை)


“அப்பா, இந்த போரடிக்கும் வேலையெல்லாம் என்னால் அகாது..

“ஒரே ஒரு நாள் ராத்திரிதான்டா.  காலையிலே வீட்டுக்கு வந்தூடலாம்

“வீட்டுக்கு வராம அங்கேயேவா குடியிருக்கப் போறேன்? அந்த ஆஸ்பத்திரி என்விரான்மென்டே எனக்கு பிடிக்காது அப்பா

“மனுஷாளுக்கு கொஞ்சமாவது நன்றி இருக்கனும்டா! அந்த மனுஷன் நமக்கு நிறைய செஞ்சிருக்கார்டா, இந்த சின்ன காரியத்தைக்கூட செய்யறதுக்கு ஒனக்கு உடம்பு வளையமாட்டேங்குதில்ல?

“....

“நீ போய் ரெண்டாம் ஆட்டம் சினிமா பாத்துட்டு, ஃப்ரண்ட்ஸொட சேந்து தம்மடிச்சுட்டு கிட,  நான் போய்ப் பாத்துக்கறேன்

"ஆரம்பிச்சுட்டியா உன்னோட யூஷூவல் டயலாக்கை?  நானே போய்த் தொலையறேன்

சரியான நச்சு இந்த அப்பா.  அவருடைய சொந்தக்காரர், யாரோ ஒரு ஆள். ஒன்னுவிட்ட மாமாவோ, சித்தப்பாவோ ஏதோ ஒரு உறவு  சொன்னார். ரங்கன் என்று பெயர். பக்கத்து உடையார்பட்டி என்னும் கிராமத்தில் எலக்ட்ரீசியனாக இருக்கிறார். ரெண்டு மாசம் முந்தி, இடது கை கட்டைவிரலில், கம்பி குத்திவிட்டது.  அதனை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார் போலிருக்கிறது. அது செப்டிக் ஆகி விட்டது.

இங்கே சேலத்தில் கொண்டுவந்து காண்பித்ததில், ஆபரேஷன் செய்தாகனும் சொல்லிட்டாங்க போல. இன்னிக்கு சாயங்காலம் ஆபரேஷன், ஆகிவிட்டது!  ஒரு நாள் இருந்து விட்டு, நாளைக்கு டிஸ்சார்ஜ் செய்துவிடுவதாக சொன்னார்களாம். அப்பா ஆபரேஷன் முடிந்து ரூமில் கொண்டுவந்து விட்டுவிட்டு, வீட்டிற்கு வந்துவிட்டார். 

அப்பாவிற்கு இரவானால், கண் சரியாக தெரியாது. லேசாக மாலைக் கண். அதுதான், என்னைப் போய் இன்னிக்கு ராத்திரி போய் பார்த்துக் கொள்ளும்படி சொல்கிறார்.

இன்னிக்கு ஃபரண்ட்ஸ் உடன் ‘நண்பர்கள் படம் பார்க்க திட்டமிட்டி ருந்தேன். அப்பா அதற்கு வேட்டு வைத்துவிட்டார். வேலை தேடிக்கொண்டிருக்கும் ஆள் என்றாலே இந்த மாதிரி வேலைகள் எல்லாம் வந்து சேரும் போல!

ஆஸ்பத்திரிக்கு போகும் போது, இரவு மணி ஏழு இருக்கும். அவர் படுத்திருக்கும் ரூமைத் திறந்தபோது, ரங்கன் ‘பள்ளி கொள்ளாமல் உலாத்திக் கொண்டிருந்தார்.

‘சித்தப்பா...

“யாரது? மணிகண்டனா?

“ஆமாம்..

‘அப்பா வரலியாடா?

“இல்லை, என்னைப் போகச் சொன்னார். அவருக்கு ராத்திரியானால் கொஞ்சம் தடுமாற்றம் வரும்

‘அட, ஆமாம்டா.. நான் மறந்தே போனேன். உங்கப்பாவுக்கு ராத்திரியில கண் சரியா தெரியாது. ஞாபகம் இருந்திருந்தால், வராதே என, நானே சொல்லியிருப்பேன்..

‘சித்தப்பா, இந்த கட்டைவிரல் ஆபரேஷனுக்கா, அட்மிட் பண்ணிட் டாங்க?

“ஆமடா.. நிறைய சதை எடுக்கும்படியா ஆயிடிச்சு, வயசாயிடிச்சில்ல? அதான் ராத்திரி இருந்துட்டு நாளைக்கு போகலாம்னுட்டாங்க

“எதனாச்சும் சாப்பிடறதுக்கு வாங்கிட்டு வரட்டா?

“ஒன்னும் வேண்டாம், ஆஸ்பத்திரியிலேயே கொடுத்துட்டாங்க. நீ இந்த பக்கத்து பெஞ்சிலேயே படுத்துக்கலாம். நீ சாப்டாச்சா?

‘இல்லை, இனிமேத்தான், நான் கீழே போய் கேண்டீன்ல சாப்பிட்டு விட்டு வர்ரேன். அது வரைக்கும் தனியா இருப்பியா?

‘தனியா இருக்கறதுக்கென்ன? நீ போய் வா.

கீழேபோய் சாப்பிட்டு விட்டு, ஒரு தம் அடித்துவிட்டு மெள்ளத்தான் மேலே வந்தேன்.

இந்த மருந்து வாசனையும், பினைல் வாசனையும் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. என்ன செய்ய? பெட்டிற்கு எதிர்ப்பக்கத்தில், அட்டென் டென்களுக்காக போடப்பட்டிருந்த இருந்த பெஞ்சில் தலை சாய்த்தேன்.

மணி பதினொன்றிருக்கும். சித்தப்பா “ஐயோ, அப்பா.. என கத்தினார்.

எழுந்து பார்த்தால், சித்தப்பா விரலைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

‘டேய், மணிகண்டா கட்டைவிரல் வலி உயிர் போகிறதடா, போய் நர்ஸை கூட்டிக்கிட்டு வாடா என அலறினார்.

எழுந்துபோய் வார்டு நர்ஸை கூப்பிட்டுக் கொண்டு வந்தேன். அவர் வந்து காயத்தை சோதித்தார். இரத்த அழுத்தம் பார்த்தார். பல்ஸ் பார்த்தார். வலிக்கு இரண்டு மாத்திரை தந்துவிட்டு சென்றார்.

அரைமணி நேரம்தான் சென்றிருக்கும். சித்தப்பா மீண்டும் அலற ஆரம்பித்தார்.

“ஐயோ வலிக்குதடா, நர்ஸ் கிட்டே போய் மாத்திரை வாங்கியாடா

இதென்ன பிடுங்கலாய்ப் போயிற்று? இதுக்குத்தான் ஆஸ்பத்திரிக்கெல்லாம் போகமாட்டேனென்றேன்.

மீண்டும் நர்ஸ் இடம் போய் முறையிட்டேன்.

“அவருக்கு ஒன்னுமில்ல. எல்லாம் நல்லாத்தான் இருக்கு. மறத்துப் போகறதுக்கு போட்ட ஊசியின் எஃபெக்ட் போனதால் அவருக்கு வலிக்கிறது. நகக்கண் இல்லையா? அப்படித்தான் வலிக்கும். பொறுத்துக்கச் சொல்லு

அதை, திரும்ப வந்து ரங்கனிடம் சொன்னால் இன்னும் வேகமாய் அலறுகிறார். “வலி தாங்கலியடா

மீண்டும் நர்ஸிடம் போய் ஏதாவது வலி மாத்திரை கேட்டேன்.

“ஏன் தம்பி, உங்களுக்கு ஒரு தடவ சொன்னா புரியாது? வலி மாத்திரையெல்லாம் சும்மா, சும்மா தர முடியாது. டாக்டர் எழுதியிருக்கறபடி தான் தரமுடியும். அவரிடம் கேட்டுவிட்டேன். அவ்வளவுதான் கொடுக்கச் சொன்னார்

இதென்ன கஷ்டம்?

கீழேபோய் மீண்டும் ஒரு ‘தம்போட்டுவிட்டு, வரும்போது சித்தப்பா விற்காக ‘சிலது வாங்கிக் கொண்டு வந்தேன்.

“சித்தப்பா, வாயைத் திற, இப்ப நான் கொடுக்கும், நாலு மாத்திரையை முழுங்கக் கூடாது.  நாக்குக்கடியில் அடக்கி வைத்துக் கொள். தானே கரைய வேண்டும். கசக்காதாம். லேசா தித்திப்பாகத்தான் இருக்குமாம். உடனே வலி சரியாய்ப் போய்
விடும். மீண்டும் வலியெடுத்தால், இன்னும் நாலு மாத்திரை எடுத்து நாக்குக்கடியில் வைத்துக்கொள். ரொம்ப பவர்ஃபுல் மாத்திரை. விலை அதிகம். வெளியில் போய் வாங்கிக் கொண்டு வந்தேன்.

“சரிடா.. ரொம்ப புன்னியமாப் போச்சு.. என்றார் அனத்தலுடன்

அதன் பின் சித்தப்பா தொந்தரவில்லை. காலை, அப்பா வந்து என்னை ‘ரிலீவ்செய்ய வந்தார்.

‘ராத்திரி எனக்கு வலி ரொம்ப தாங்க முடியலடா. உம் பையன் தான் வெளியில போய் எனக்கு மாத்திரை வாங்கியாந்தான். விலை அதிகமாம். போட்டவுடனே வலி மறைஞ்சு போச்சுடா. விடிய காத்தாலே மறுபடியும் வலி வந்தப்ப, மேலும்  நாலு மாத்திரை எடுத்துக் கொண்டேன். இப்ப பரவாயில்லைடா என்றார்.

‘ஆரோட பய இவன்? ஒடம்புதான் வணங்காது. ஆனா புத்திசாலியில்ல எம்மவன்?

ரங்கனை, அப்பாவிடம் ஒப்படைத்து விட்டு, கீழே இறங்கி வந்தேன். 

ராத்திரி, சித்தப்பாவுக்காக, ‘ஐந்து ரூபாய்க்கு வாங்கிய, ஒரு கைப்பிடி அளவு, ‘காஸ்ட்லி மருந்தான ‘சீரக மிட்டாய்களின், மீதியை தூரக் கொட்டிவிட்டு வீட்டிற்கு வந்தேன்.

No comments:

Post a Comment