Tuesday, May 8, 2012

மூளையற்றுப் போக அனுமதியோம்!

இந்தியர்களாகிய நமது மனப்போக்கும், நடத்தையும் சில சமயம் அதிர்ச்சியளிப்பதாகவும், எரிச்சலூட்டுவதாகவும் இருக்கிறது! சட்டென அன்பைப் பொழிவதும், சடாரென வெறுப்புக்கு மாறுவதும் நம்மவர்களுக்கு ‘உறுத்தலின்றி வரும் குணாதிசயங்கள். ஒற்றுமை குறித்து தொண்டை வலிக்க உரையாற்றுவோம். பின்னாலேயே ஏதாவது ஒரு காரணம் காட்டி, அடுத்தவர் மீது வெறுப்பைக் காட்டவும் தயங்க மாட்டோம்.  


பொதுவாகவே எல்லா விஷயங்களுக்கும், மிகச் சுலபமாக உணர்ச்சி வயப்படும் நாம், ‘இனத்தின் பேரால், ‘மதத்தின் பேரால், ‘ஜாதியின் பெயரால், ‘கட்சியின் பெயரால், ‘தொழிற்சங்கத்தின் பெயரால்’,  ‘மாநிலத்தின் பெயரால்’, ‘மொழியின் பெயரால் மற்றவர்களின் மீது வெறுப்பை உமிழ்வதற்கு, ஒரு போதும் தயங்குவதில்லை! இந்த விந்தை முரண்பாடுகளின் வெறுப்பு வரிசைகள், கவலைப்படத்தக்க வேண்டிய ஒரு அம்சமாக, தற்போது விரிவடைந்து விட்டது!

தனிமனிதனாக, யோக்யம் நாம், கூட்டமாக மாறும் போது, தனிமனித சிந்தனைப்போக்குகளைத் துறந்து,  வன்முறைகளை தயக்கமின்றி கையிலெடுப்பதை, பல சமயம் பார்த்திருக்கிறோம். சாத்வீகர்கள் கூட ‘கல்லெறிவதற்கு தயாராகி விடுகிறார்கள்!

எங்கோ ஆஸ்திரேலியாவிலோ, ஃபிஜித் தீவிலோ, பிரிட்டனிலோ இந்தியர் களுக்கு அபூர்வமாக ஒருஅநீதி இழைக்கப்பட்டாலோ, வன்முறை பிரயோகிக்கப்பட்டாலோ உடனடியாக “பொங்கியெழும்நாம், மிகச் சுலபமாக, எப்படி நமக்குள்ளேயே வெறுப்பைக் கக்கிக் கொள்ளமுடிகிறது? ஒருவேளை, நம்மவர்களுக்கு,  எதிலும் எப்பொழுதும் ஒரு ‘குழு மனப் பான்மை தேவைப் படுகிறதா?

ஷெட்யூல்ட் மற்றும் மலைவாழ் மக்களிடம் காட்டப்படும் வெறுப்பு மற்றும் அநீதி,  அரசு மற்றும் பொது நல அமைப்புகளின் தொடர் முயற்சியால் பெருமளவு குறைந்திருந்தாலும், முற்றிலுமாக நீங்கி விட்டதாகச் சொல்ல முடியாது. உத்திரப் பிரதேசம், ராஜஸ்த்தான் போன்ற மாநிலங்களிலிருந்து அவ்வப்போது வெளிவரும் செய்திகள், ஏன் ‘வச்சாத்திவன்முறைகள் கூட இதை நிரூபித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

முஸ்லீம்களை வெடிகுண்டோடும், வன்முறையோடும் சம்பந்தப்படுத்தும் அநாகரீகம், அசிங்கம், புத்தியில்லாத்தனம் உலகெங்கும் நடைபெறுகிறது.  திரு அப்துல்கலாம் முதல் நடிகர் ஷாருக்கான் வரை ‘அமெரிக்க விமான நிலையங்களில் அவமானப்படுவது தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது?

உயர்ஜாதி என்று கருதப்படும் அல்லது அழைக்கப்படும் பிரிவில் உள்ள  சிலரை எப்படி வேண்டுமானாலும் அவமானப்படுத்தலாம் என்ற முரண் நடந்து கொண்டுதானே உள்ளது!

காவிரிப் பிரச்சினையா? பெங்களூரில் தமிழர்களை உதை. முல்லைப் பெரியார் பிரச்சினையா? தமிழகத்தில் இருக்கும் மலையாளிகளை  அடி! அவர்களது வியாபார இடங்களை (அது டீக்கடையானாலும் சரி) உடை. கர்நாடகத்தில் மராட்டியர்களை நொறுக்கு! சிவ சேனா உபயத்தில், பீகாரிகளை, மும்பையில் அடி!

காஷ்மீரிலிருக்கும் இந்துக்களை, அவர்கள் வாழந்து கொண்டிருந்த இடத்தி லிருந்து துரத்து. சொந்த மானிலத்திலேயே, வீடு நிலங்களை இழந்து, பரம்பரையாக வாழ்ந்து வந்த இடங்கள விட்டு விரட்டப்பட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் அவலம் இவர்களைச் சார்ந்தது!

எவனோ ஒரு தீவீர வாதி இந்திராகாந்தியை சுட்டுக் கொன்று விட்டானா? உடனே சீக்கியர்களை குறிவைத்து கொலை செய்!

எப்போதிலிருந்து, எதற்காக,  எவ்வாறு நாம், ஒற்றுமையையும், பொறுமை யையும், சகிப்புத் தன்மையையும் இழந்து, எந்தக் காரணத்திற்காகவும் எவரையும், எதற்கும் வெறுப்பதற்குக் கற்றுக் கொண்டோம்?  நமக்கு சொல்லித்தர, வழிகாட்ட உண்மையான, சத்திய சீல தலைவர்கள் அருகி விட்டார்களா? புத்தரையும், காந்தியையும் ‘பரீட்சையில்மார்க்கு வாங்கு வதற்காக மட்டும்தான் படித்தோமா? நன்நெறி நூல்கள் பலவற்றையும் வாங்கி-வாங்கி  என்ன செய்கிறோம்? கடையில் போட்டு வெங்காயம் வாங்கித் தின்றுவிட்டோமா?

காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்னாடகத்தை கண்டிக்கும் நாம், வீராணத்திலிருந்து சென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம் எனக் கூற தயங்க மாட்டோம்.

அவ்வளவு ஏன்? படித்த, ஒத்த சிந்தனை கொண்ட இடதுசாரி கொள்கைகள் கொண்ட தொழிற்சங்கங்கள் கூட, மாற்று தொழிற்சங்க தொழிலாளி மீது, பகைமையை தூண்டிவட தயங்குவதில்லையே! மாற்று சங்கதொழிலாளிக்கு எதிராக 'சூது' செய்யவும் தயங்குவதில்லை!கோஷம் என்னவோ "உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்" என்பது!

நமது, வெறுப்புகளின் பட்டியலில் தற்போது ‘வட, மற்றும் ‘வடகிழக்கு மாநிலங்களின் சகோதரர்கள் அகப்பட்டுக் கொண்டுள்ளனர். தமிழகத்தில், பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டுமானப் பணிகளில், வட மாநில தொழிலாளிகள் ஈடுபட்டிருப்பதைக் காண்கிறோம். அவ்வளவு ஏன்? ஹோட்டல்களில் ‘பேரர் களாக பல வடகிழக்கு மாநிலத்தவர், பெண்கள் உட்பட, பணி புரிவதை காண்கிறோம். நமது மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் வேலை கிடைத்து விட்டதால் இந்த நிலைமை இல்லை! நமது மக்களில் பலர் அந்த மாதிரியான கடின வேலைகளுக்கு தயாராக இல்லை என்பதும் வட மாநிலத்தவர்கள் சற்று குறைவான சம்பளத்திற்கு உழைக்க சம்மதிப்பதுமே, இதற்குக் காரணம்.  (நம்மவர்கள் அன்றைய ‘டாஸ்மார்க் தேவைகளுக்கு, சுலுவான வழிகளில் சம்பாதித்து விட்டால் போதும் என்ற மனோபாவம் வேறூன்றி விட்டது. விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைக்காமல் தினறும் அவலம், விவசாயிகளைக் கேட்டால்தான் புரியும்.)


இப்போது, வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலத்தவர் மீதுதான், லேட்டஸ்ட் தாக்குதல்கள்! சென்னையில் ஒரு வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், வட மாநிலத்தவர் என்பதால், அனைத்து வடவர்களும் ‘கொள்ளைக் காரர்களே! (அம்மாநில மானவர்களும், ஊழியர்களும், சென்னையில்,  வாடகைக்கு வீடு தேடுவதில் படாதபாடு படுகின்றனர்)


தில்லி கோர்கானில், வட கிழக்கு மானிலத்தைச் சார்ந்த (மேகாலயா) ‘டானா சங்மாஎன்ற பெண், தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரில் பொறியியல் கல்லூரியில் படிக்கும் ‘ரிச்சர்ட் லோய்டம் (மனிப்பூர்) என்ற மானவர் கொல்லப்பட்டார். இந்த இரண்டு இறப்புக்களுக்கும் கல்லூரி நிர்வாகம் காரணமாக இருக்கலாம் என பத்திரிக்கைகள் குற்றஞ் சாட்டுகின்றன. இந்த இரண்டு இறப்புக்களுக்கும் எதிராக வட கிழக்கு மாநிலங்களில் கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றன.


நமது அரசு, நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லை மானிலங்களில் லட்சக் கணக்கான கோடிகளைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. அது தவிர நமது ஜவான்கள் பலர், பணி நிமித்தமாக,  தங்களது உயிரை தியாகம் செய்து கொண்டிருக்கின்றனர். அங்கே, உள்ளூர் மக்களின் ஆதரவின்றி நமது ராணுவம் வெற்றிகரமாக செயலாற்ற சிரமப்படுகின்றனர். இம்மாதிரியான கொலைகள், அம்மாநிலத்தவர், இந்தியாவை இன்னமும் வெறுக்கத்தான் வைக்குமே தவிர, நேசிக்க வைக்காது.

அடிப்படையாக, எப்போது நாம், சக மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொள்கி றோமோ அப்பொழுதுதான் நிஜமான மானுடம் நிலைபெறும். பிரச்சினை களுக்கான தீர்வு அங்கிருந்துதான் துவங்குகிறது – அது குடும்பமானாலும் சரி – சமூகமானாலும் சரி. நமது பெரியோர்கள் பல நன்னூல்கள் வழியாக இந்த இணக்கத்தைத்தான் போதித்தார்கள்!

ஆனால், தற்போது உலாவரும் நமது "சமகால அரசியல் தலைவர்கள்",  ‘ஜாதி, ‘இன, ‘மொழி’, ‘பிராந்திய, ‘மத உணர்வுகளைத் தூண்டி, தொண்டை கிழிய பேசுவதில் வல்லவர்களாயிறே? சமூகத்தில் அமைதியின்மையும், கலவரமும், சண்டையும் நடந்து கொண்டே இருந்தால் தானே, அவர்களால், "தொடர்ந்து தொழில் நடத்த" முடியும்? கொள்ளையடிக்க முடியும்? 


அவர்கள் திருந்த மாட்டார்கள்! அவர்களது சீடர்களையும் திருந்த அனு மதிக்க மாட்டார்கள். எனவே மாறுதல் நம் கையில்தான் இருக்கிறது; நாம் தான் அதைச்செய்தாக  என்பதை உணர்ந்தால் நல்லது! 

No comments:

Post a Comment