Sunday, June 10, 2012

ஆக்கிரமிப்பு




மனித இனம் தோன்றியதிலிருந்து, தனது வாழ்வினை சுகமாக்கிக் கொள்ளவும், எளிதாக்கிக் கொள்ளவும், தொடர்ந்து, புதிது புதிதாக, கருவிகளை, மனிதன் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கிறான்.

சில கண்டுபிடிப்புகள், காலாவதியாகிவிடுகின்றன. சில கண்டுபிடிப்புகள் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடுகின்றன. இவ்வகையில் பல்வேறு கருவிகளைச் சொல்லலாம். ஆனால் மனித இனத்தையே தனது காலடியில் கட்டிப் போட்டுவிடும் அளவிற்கு, தனது கண்டுபிடிப்பிற்கே தான் அடிமையாகிவிடும் அளவிற்கு, வலுவானதொரு கருவியினை மனிதன் கண்டுபிடித்துவிட்டான்!

அதுதான், கைபேசி என்றழைக்கப் படும் 'செல்போன்'.

இந்தியாவில் செல்போன்களின் எண்ணிக்கை 70 கோடியைத் தாண்டி விட்டதாம். இன்னமும் செல்போன் வாங்காத அந்த 30 கோடிப்பேர்கள் யார் என்று புரியவில்லை! அடுத்த தேர்தல் அறிக்கையில், நமது அரசியல்வாதிகள், தங்களது ‘இலவச லிஸ்ட்டில் “செல்போனையும் சேர்த்துக் கொள்வார்கள் என  நம்புவோம். ஓட்டு உறுதியாகிவிடும்.

பதினைந்தாண்டுகளுக்கு முன்னர் கூட ‘ஓ.ஒய்.டி கேட்டகிரியில் லேண்ட்லைனுக்கு அப்ளைசெய்து, வருடக்கணக்கில் காத்திருந்த காலம் இருந்தது! அப்போது அரசாங்கம் மட்டுமே (DOT), தொலைபேசி சர்வீஸினைக் கொடுத்துக் கொண்டிருந்தது.  இப்போது கிட்டத்தட்ட எல்லா ‘கம்பெனிகளும் சிம் கார்டுகளை இலவசமாக வழங்குகின்றன.

பூ விற்பவள், டாய்லெட் கிளீன் செய்பவர், துணி அயர்ண் செய்பவர், பழைய பேப்பர் வாங்குவோ, அர்ச்சகர் என எல்லோரது சர்வீஸும் ஒரு ஃபோன் காலில் முடிவடைந்து விடுகின்றன.  இன்று காலை, சமையலுக்கு ‘முளைக் கீரை வேண்டியிருந்தது; மனைவி, வாடிக்கையாக கீரைவிற்வளை ஃபோனில் கூப்பிட, “அடுத்த தெருவில் தான் இருக்கிறேன். இன்னும் பத்து நிமிஷத்தில் வந்து விடுவேன். உனக்கு ஒரு கீரைக் கட்டு எடுத்து வைத்துவிடுகிறேன்என பதில் கிடைத்து விட்டது. துணி அயர்ன் செய்பவர் ‘துணி இருக்கிறதா?என SMS –ல் வினவுகிறார்.

இது தவிர,  எண்ணற்ற அப்ளிகேஷன்கள், ஆன்லைன் பேமென்டுகள், ஆன்லைன் பர்சேஸ்கள், மொபைல் பேங்கிங், மேப்கள் போன்றவை, செல்ஃபோன்களை நமது உடலின் தவிர்க்க இயலாத ‘உறுப்பாகவே மாற்றிவிட்டன.

இந்த பயன்களை அனுபவிக்காவிடினும், இருக்கவே இருக்கிறது ‘FM!

எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது.

எதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறதல்லவா?

நம்மவர்களுக்கு, ஒரு நாள் செல்ஃபோனை, வீட்டில் மறந்து வைத்துவிட்டு அபீஸுக்கு வந்து விட்டால், ‘குடிகாரனுக்கு சாராயம் கிடைக்க வில்லையெனில்ஏற்படும் அவஸ்தையைப் போல உடம்பு நடுங்க ஆரம்பித்து விடுகிறது. மனம் பரிதவிக்கிறது! பர்மிஷன் போட்டு, ஆட்டோ பிடித்தாவது வீட்டிற்குப் போய் ஃபோனைக் கவர்ந்து கொண்டு வந்தால்தான் பதற்றம் நிற்கிறது.

ஏதேனும் அழைப்போ, அல்லது SMS –ஓ வரவில்லை என உறுதியாகத் தெரிந்தாலும் கூட, நிமிஷத்திற்கு ஒருதடவையாவது, தனது செல்ஃபோனை, பாக்கட்டிலிருந்தோ, அதற்கான உறையிலிருந்தோ எடுத்து, ஒருதடவை ‘கிரீன் பட்டனை அழுத்திப் பார்த்தால்தான் நிம்மதி. நிம்மதி என்ன? இது அனிச்சைச் செயலாகவே மாறிவிட்டது!

பள்ளிக் குழந்தைகளும், கல்லூரி மாணவ/மாணவிகளும்  காலை எழுந்ததும், பேஸ்ட் பிரஷை எடுக்கிறார்களோ இல்லையோ, செல்ஃபோனை எடுத்து நோண்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். அப்படி என்னதான் அதில் இருக்கிறதோ? இவர்கள் கையிலிருந்து செல்ஃபோனையும், மாரியம்மன் கோவிலிலிருந்து எல்.ஆர்.ஈஸ்வரி சி.டி க்களையும் பிடிங்கிவிட்டால், அவர்கள் என்ன ஆவார்கள் என யோசித்தால் ஆச்சர்யமாய்த்தான் இருக்கும்!

சாலையில் செல்லும் அனைவரின் கையிலும், அவர்கள் டூவீலர், திரீ வீலர், கார், லாரி, பஸ் என எந்த வாகனத்தில் போனாலும் சரி, ஒருகையால், ஹான்டில்பாரையோ, அல்லது ஸ்டியரிங்கையோ பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் செல்ஃபோனை இடுக்கிக் கொண்டு பேசியாக வேண்டும். (ஒரு டிரயின் டிரைவர், செல்ஃபோனில் பேசிக் கொண்டே, ஒரு ரயிலை ஆக்ஸிடென்ட் செய்த்து நினைவிருக்கிறதா?) சாலையில் நடந்து போனாலும் சரி, மஹாவிஷ்ணு போல ஒருகையில் செல்ஃபோன் (சங்கு-சக்கரத்திற்கு பதிலாக) இருந்தே ஆக வேண்டும். ரோடை கிராஸ் செய்யவேண்டும் என மகாஜனம் தீர்மானித்து விட்டாரெனில், ரோடின் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் எதையும் பார்க்க வேண்டாம்! செல்ஃபோனில் பேசிக்கொண்டே கிராஸ் செய்துவிடுவார்.

எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர், செல்ஃபோன் வந்த பின், சாலை விபத்துகள் அதிகமாகிவிட்டன என்கிறார். கவனமின்றி, செலபோனில் பேசிக்கொண்டே, டிராக்கை கவனிக்காமல் டிரெயினில்  அடிபட்டு சாகின்றனர். டூ வீலர் ஓட்டுபவர்கள் கையில் செல்ஃபோனுடன் ஓயாமல் பேசிக்கொண்டே வந்து விபத்து ஏற்படுத்துகின்றனர். கார் டிரைவர்களும், பஸ்-லாரி போன்ற கனரக வாகன டிரைவர்கள் கூட செல்ஃபோனை வைப்பதேயில்லை. தோளுக்கும் காதுக்கும் இடையே பர்மெனெட்டாய் ஒட்டவைத்துக் கொள்வார்களோ என்னவோ?

சிலர் ‘டாய்லெட் டுக்குள் செல்லும் போது கூட இதை விட்டுவிட்டு செல்வதில்லை!

விடாமல் செல்ஃபோன் பேசினால் ரேடியேஷன் காரணமாக, ‘மூளையில் கட்டி வரக்கூடும் என்று கூட சிலர் சொல்லுகிறார்கள்.

ஏற்கனவே நாம், நமது பூச்சி கொல்லி மருந்துகள், ஜங்க் ஃபுட்ஸ், ஒஸோன் ஓட்டை, புதிய லைஃப் ஸ்டைல் காரணமாக மன அழுத்தம், சுற்றுப்புறச் சூழல் கேடு போன்றவற்றின் காரணமாக புற்று நோயை வரவழைத்துக் கொண்டுளோம். இந்த லிஸ்டில் செல்ஃபோனும் சேரப் போகிறதா இல்லையா எனத் தெரியவில்லை!  இது குறித்து நேர்மையான ஆராய்ச்சி நடக்குமா? செல்ஃபோன் நிறுவனங்கள் நடக்க விடுவார்களா? புரியவில்லை!

எப்படியாயினும், தேவைக்கு ஏற்ப மட்டுமே செல்ஃபோனைப் பயன்படுத்தினால், இக்கருவியினை நமக்கு சேவகனாய் வைத்துக் கொள்ளலாம்! இல்லாவிடில் அதற்கு நாம் அடிமையாக வேண்டியது தான். 

5 comments:

  1. sariyaga sonneergal sir
    manitharin moonraavathu kaiyaagave maarivittathu
    cellphone

    ReplyDelete
  2. இப்போதெல்லாம் வீட்டில் கூட பேச , நேரமில்லை. காலையில் எழுப்புவதே அதுதானே!

    தலைவலிதான்.

    ReplyDelete
  3. இந்த தகவல் கூட, கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வைக்குமா?

    http://www.marksdailyapple.com/are-cell-phones-bad-for-male-fertility/#axzz1x8xrMqQ8

    ReplyDelete
  4. செல்போன் தேவை தான், ஆனால் அது இல்லாமல் காலம் கடத்த முடியாதே அய்யா, தேவைக்கு உபயோகப்படுத்தினால் நலம் இல்லையேல் விபத்து தான், அருமையான பதிவு.

    படித்துப் பாருங்கள்

    வாழ்க்கைக் கொடுத்தவன்

    ReplyDelete
  5. Thank you for the visit Shri Seenu,Vetrimagal and Anbu
    The reference made my Smt Vetrimagal is to read
    Balaraman

    ReplyDelete