Saturday, March 1, 2014

அந்தமானைப் பாருங்கள் அழகு (2)


ராஜிவ் காந்தி நீர் விளையாட்டரங்கு 
(Rajiv Ghandhi Water Sports Complex)

இங்குள்ள தீவுகள், கடற்கரைகள், மலைகள், சிகரங்கள் போன்ற  யாவற்றின் பெயர்களும், ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் கோலோச்சிய பிரபுக்களின் அல்லது அவர்களது மனைவிமார் களின் பெயர்களிலேயே இருக்கின்றன. கார்பின்ஸ் கோவ் பீச் (Carbyn’s Cove Beach), Ross island, Mount Harriet, Havelock island, Neil Island போன்றவை உதாரணங்களே! பூர்வகுடிகள் வைத்திருந்த பெயர்கள் என்ன வாயிற்று என்று தெரியவில்லை. அது பற்றிய தகவல்களும் இல்லை. இன்னமும் ஆங்கிலேய பெயர்களையே ஏன் வைத்துக் கொண்டிருக்கிறோம் எனப் புரியவில்லை.






நமது  நாட்டில் பஸ்ஸ்டான்ட் முதல், விமான நிலையம் வரை சில குறிப்பிட்ட தலைவர்களின் பெயர்களையே  மாறி-மாறி வைத்துக் கொண்டிருப்பதும் விநோதம் தான் . வேறு எந்த நாட்டிலாவது இம்மாதிரி செய்கிறார்களா எனத் தெரியவில்லை. 

நாட்டில் வேறு தியாகிகளே இல்லையா என்ன? ஏதோ ஒருவகையில்,  நாம் தனி நபர்களை அடிவருடிக்கொண்டே இருக்கிறோமா என சந்தேகமாய் இருக்கிறது. அந்த வகையில் அந்தமானில் இருக்கும் நீர் விளையாட்ட ரங்கிற்கும் "ராஜிவ்காந்தி" பெயர் சூட்டியிருக்கின்றனர். (Rajiv Gandhi Water Sports Complex)

இந்த இடம், சாகச விளையாட்டு விரும்பிகளுக்கு உகந்த இடம் அல்ல! ஆனால் பாதுகாப்பான, பயமில்லாத பகுதி. குழந்தைகளும் பெரியவர்களும் அனுபவிக்கும் அளவிற்கு கடலைத் தடுத்து ஒரு அரங்குபோல அமைத்து இருக்கிறார்கள். Paddle boats, row boats, glass bottom boats etc..  ஆகியவை விளையாடலாம் .

இங்கேயே கொஞ்சம் தள்ளிப்போனால் Jet-Ski, Para sailing கூட போகலாம். விளையாட்டுகளுக்கான டிக்கட்டுகள் யானை விலை சொல்கிறார்கள். 

இந்த காம்ப்ளெக்ஸ் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.  நடுவே ராஜிவின் சிலை!

நம்மவர்களின் கைவரிசையில், காம்ப்ளெக்ஸில் இருக்கும் கடலின் ஓரத்தில், தண்ணீர் பாட்டில்கள், சிப்ஸ் பாக்கெட் கவர்கள், பிளாஸ்டிக் பேப்பர்கள், ஐஸ்கிரீம் கப்கள் என உள் நாட்டு டூரிஸ்ட்கள், தின்று தீர்த்துவிட்டு கடலில் எறிந்த குப்பைகள் மிதக்கின்றன. ராஜ மன்னார்குடி குளம்போல தூக்கி எறியப்பட்ட பொருட்கள், மலை போல மிதந்து கிடக்கின்றன. இத்தனைக்கும் பத்து அடிக்கு ஒரு குப்பைக் கூடை வைத்திருக்கிறார்கள்.

"அந்தமான் இது பிளாஸ்டிக் ஃப்ரீ இடம்; சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள்" என உள்ளூர் அரசாங்கம் போர்டுகள் அமைத்து கதறுகிறார்கள். ம்ம்ம்ம்ம்ம்... நாம் தான், சொன்னாலும் தெரியாது; சுயமாகவும் தெரியாது என்கிற இனமாயிற்றே!  நமது ஜனங்களின் இந்த நடத்தை, பார்ப்பதற்கு கேவலமாக இருக்கிறது. அதுவும் வெளி நாட்டினர் அதிகம் வரும் இடத்தில்! அவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று தோன்றவே தோன்றாது போலிருக்கிறது. வெளி நாட்டு டூரிஸ்டு தம்பதியர் ஒருவர், ஆஸ்திரேலியா என நினைக்கிறேன்; வேலை மெனக்கெட்டு  நாம் எறிந்துவைத்த பிளாஸ்டிக் கப்களை சேகரித்து டஸ்ட்பின்னில் போட்டுக் கொண்டிருந்தனர். ம்ம்ம்ம்ம்ம்..

கார்பின்ஸ் கோவ் பீச் (Carbyn’s Cove Beach)

போர்ட் பிளேயரிலிருந்து சாலை வழியே செல்லுக் கூடிய இந்த பீச்சிற்கு செல்லும் வழியே உன்னதாமாய் இருக்கிறது. இரண்டு பக்கமும் அடர்த்தியாக பாக்கு மரங்கள. குளுமையான சூழல். உண்மையிலேயே கண்களுக்கு விருந்து தான்.






எல்லா பீச்களைப் போல இதுவும் வளைந்து-நெளிந்து அமைந்த கடற்கரையைக் கொண்டது.. வெள்ளை வெளேர் என பரந்து விரிந்து (lime stone and)  கிடக்கும் மணற் பரப்ப்பு. மனல் முடிந்ததும் உயர-உயரமான தென்னை மரங்கள், நெருக்கி யடித்து நின்று கொண்டிருக்கின்றன. நடுவே படாக் மரங்கள்.  நிழல்களில், மரத்திலான சாய்வு நாற்காலிகள் அமைத்திருக்கின்றனர் . அதில் படுத்துக் கொண்டு நெடுதுயர்ந்திருக்கும் தென்னைகளைப் பார்த்துக்கொண்டு, எதிரே அழகே வடிவாய் சரிந்து கிடக்கும் கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் போல இருக்கிறது. இயற்கையோடு ஒன்றிப்போக உகந்த இடம். வண்ணமாய் இங்கு ஜொலிக்கும் கடல் வேறு எங்கும் காண இயலாத ஒன்று. கரு நீலம், ராமர் நீலம், வெளிர் நீலம் என நேரத்திற்கொன்றாய் விரிகிறது.

சிடியாதபு பீச் (Chidiya Tapu beach)









சிடியாதபு பீச், போர்ட் பிளேயரிலிருந்து 20 கி.மி இருக்கும்.  சாலை வழியே செல்லலாம். இயற்கை வஞ்சனை இல்லாமல் அழகை வாரி இறைத்திருக்கிறாள். வளைந்து நெளிந்து செல்லும் கடற்கரை. கடற்கரை ஓரத்தில் அடர்த்தியாக, நெடு நெடுவென, புரமாண்டமாய் வளர்ந்திருக்கும் படாக் மரக் கூட்டங்கள்.
நல்ல நிழல்.  வண்ணமயமான, நாம் இதுவரை பார்த்தே இராத, வினோதமான பறவைக் கூட்டங்கள், அவற்றின் கீச்சு-கீச்சுக்கள் சொக்க வைக்கின்றன.


அலைகள் அற்ற ஷேலோ வாட்டர். தெள்ளத்தெளிவான நீர். புதுப்பெண்ணின் கைவளையோசை போல, மென்மையாக, சினுங்குவது போல, கொஞ்சுகின்றன சிற்றலைகள்.

ஆங்காங்கே, இயற்கையின் சீற்றத்தினால் கடற்கைரையில்-கடலைத் தொட்டுக்கொண்டு, வீழ்ந்து கிடக்கும் பட்டுப்போன மரங்களை அப்படியே வைத்திருக்கிறார்கள். அதுவே பேரழகாக  இருக்கிறது. வெகு தூரத்திற்கு முழங்காலளவே இருக்கும் அமைதியான, அழகான, ஆழமற்ற கடல். குடும்பத்துடன் குளிப்பதற்கும், நீந்துவதற்கும் ஏற்ற இடம். பேரானந்தமான இடம். கொள்ளை அழகு. தமிழ் சொற்களின் மேல் எனக்கு ஆதிக்கம் இல்லாததினால் வருணிக்க வார்த்தைகள் சிக்கவில்லை. பார்க்க வேண்டிய இடம்.

ஆந்ரோபாலிஜிகல் மியூஸியம் 
(Anthropological Museum):

பூர்வ குடிகளின் (Jarwas, Sentinelese, Great Andamanese and the Onges, Mongoloid ribes)  வாழ்க்கை முறைகள், அவர்களது ஆயுதங்கள், கைவினைப் பொருட்கள், ஆடைகள், அணிகலன்கள், அவர்களது குடில்கள், உணவுப் பொருட்கள், படகுகள்

போன்றவற்றை, மூன்று மாடிகளில் காட்சிப் படுத்துயுள்ளனர். ஃபென்டாஸ்டிக்.  பூர்வ குடிகளின் வரலாறு அறிய விரும்புபவர்களுக்கு சுவாரஸ்யமான இடம்.  நுழைவுக் கட்டணம் உண்டு. வேலை நேரம் காலை எட்டரைமுதல் மாலை நான்கரை வரை. வியாழன் விடுமுறை.

சமுத்ரிகா மியூஸியம்.




கடல் சார் உயிரிணங்கள், சிப்பிகள், கோரல்கள், மீன் வகைகள் போன்ற வற்றை வைத்திருக்கிறார்கள். ஒரு அக்கோரியமும் உள்ளது. கோரல் வகைகள் பிரமிப்பூட்டுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட கலக்ஷென்கள். விற்பனைக்கு என தனியாக ஒரு ஸ்டால் இருக்கிறது.  சிப்பி, சங்கு, மற்றும் மரத்தினாலான  கைவினைப்பொருட்களை வைத்திருக்கிறார்கள்.  பார்க்க வேண்டிய இடம். நுழைவுக் கட்டணம் உண்டு.  காலை ஒன்பது முதல் மாலை நாலே முக்கால் வரை வேலை நேரம்.

எல்லா மியுஸியத்திற்கும் காமிரா கட்டணம் தனி.
கொசுறு:


எழில் கொஞ்சும் சிடியா தபு கடற்கரையில்,   குழந்தைகள், பெண்டிர் உட்பட பலர் மெய்மறந்து, குதூகலத்துடன் குளித்துக் கொண்டிருந்தனர்.   ஒரு புன்னியவான் வந்தார். எல்லோரும் மேலே வாருங்கள்  ஓடுங்கள்.. ஓடுங்கள், அதோ பாருங்கள், அங்கே  ஒரு முதலை, கடலில்  வந்து கொண்டிருக்கிறது என அலறினார். 
( “அந்தமான் முழுவதும்  உப்பு நீர் முதலைகள் தென்படு கின்றன. எனவே  எச்சரிக்கையாக இருங்கள்”  என அறிவிப்புபலகை ஆங்காங்கே வைத்திருக்கிறார்கள்.) 

உடனே, அலறிப் புடைத்து எழுந்து ஓடினோம். நான் கையில் வைத்திருந்த சிறிய பனாகுலரை பறித்து, அதன் மூலம் பார்த்தனர்.  ஒரு ஐந்த நீளத்திற்கு கருமையான நிறத்தில் (ஆன்டி லைட்டாதலால் – அனைத்தும் கருமையாகத்தான் தெரியும்) ஒன்று நீந்திக் கொண்டிருப்பது போல இருந்ததாம். அனைவரையும் பதற்றம் தொற்றிக் கொண்டது. அனைவரும் பீதியுடன் கடற்கரை ஓரத்திற்கு விரைந்தனர்.

மீண்டும் அந்த புன்னியவான் அலறினார். “அதோ பாருங்கள். இன்னொரு முதலை. அதைவிட பெரிதாக... “ என்றார். தண்ணீரில் மூழ்கி மூச்சு விடும்பொழுது ஏற்படும் பப்பிள்கள் கூட தெரிகின்றன என்றார். இம்முறை நானே பைனாகுலரில் பார்த்தேன். முதலை போல தோன்றவில்லை. ஆனால் ‘அது எது’  என உறுதியாகச் சொல்லவும் தயக்கமாக இருந்தது. முதலைகளின் வேட்டை குணம் என்ன வென்று தெரியுமாதலால், அது முதலை அல்ல என அறுதியிட்டு சொல்லி, ரிஸ்க் எடுக்க விழையாமல் வெளியேறினோம். இன்னும் கொஞ்ச நேரம் இந்த பீச்சில் விளையாடி இருக்கலாம். முதலை எங்களைத் துரத்திவிட்டது.
எங்களது ஆனந்தமும் அற்பாயுளில் முடிந்த்து. சூரிய அஸ்தமனத்தை கரையிலிருந்து பார்த்துவிட்டு திரும்பினோம் 

உன்மையில் நடந்தது என்ன வென்றால், அது ஒரு ஷேலோ வாட்டர் பீச். ஆதலால், மாலை நேரங்களில் கடல் உள்வாங்கும் தன்மையுடையது. 

மாலை நேரம் ஆக, ஆக, கடல் உள் வாங்க ஆரம்பித்திருக்கிறது. இதனால், ஆழமும் குறையு மல்லவா?   கடல் உள்வாங்க-உள்வாங்க நீரில் மறைந்திருந்த பாறைகள் யாவும் ஒவ்வொன்றாய் வெளியே தலை நீட்ட ஆரம்பித்திருக்கின்றன. அவ்வளவே!

பாறைகளை முதலைகள் என்றென்னி ‘கரடி’ விட்டிருக்கின்றனர். வதந்திகளை விரும்பி வரவேற்கும் நாம், உண்மைகளை எவராவது சொன்னால், நம்ப மறுக்கிறோம். அது மாஸ் சைக்காலஜி!

அடுத்த பகுதியில் (பகுதி மூன்றில்) சந்திப்போம்




3 comments:

  1. சுவாரசியத்துடன் நானும் பார்த்த உணர்வைத் தருகின்றது.தொடரட்டும் அனுபவம்!

    ReplyDelete
  2. இவை அங்கிருப்பது முன்னரே தெரிந்தாலும் , நீங்கள் சொல்லும்போது உள்ள சுவை அங்கு போக தூண்டுகிறது . அவை சரி உங்கள் அனுபவம் , சொல்லிய விதம் நன்கு இருக்கிறது . வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  3. மிக அருமையான பயணத்தை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் . தமிழ் இனிமையை , நயத்தை , சொல்லியபாங்கை மிக ரசித்தேன் . கடைசி வரிகள் அற்புதம் " நம்மை........ .
    BT அரசு .

    ReplyDelete