Tuesday, January 13, 2015

சகியாமை:


சமீப நாட்களில், நாம் மிகவும் உணர்ச்சி வயப்படுபவர்களாகவும், தங்களுக்கு உதிப்பது மட்டுமே சரி என்பது போலவும் சிந்திக்க ஆரம்பித்து விட்டோமோ என கவலையாக இருக்கிறது. சாதிய பிடிப்பு அதிகம் உள்ள சமுதாயத்தில், எதை எழுதினாலும் எவராவது கோபித்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது!

அந்த புத்தகம் சரியா அல்லது தவறா என்பது பற்றி வினா எழுப்பப் போவதில்லை. அத்தகைய கேள்விக்கு தீர்மாணமான முடிவு இல்லை. அவர் எழுதியது சரித்திரமும் இல்லை. அவர் எழுதியது மட்டுமில்லை. எவர் எழுதும் புதினங்களும் வரலாறு இல்லை. (வரலாறே கூட ஆளும் வர்க்கத்தினருக்கு சாதகமாக எழுதப்படுவது நடக்கிறது அல்லவா?) ஆவனமும் இல்லை.

அவர் எழுதியதில் உள்நோக்கம்  இருப்பதாகவே வைத்துக் கொள்ளலாம். அதற்கு எதிர்வினையாற்றுவதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றன. புதினத்தை எதிர்த்து, அவரது நாவல் பிழையானது என எத்துனை முறை வேண்டுமானாலும் கட்டுரைகள் எழுதலாம். ஆய்வுகள் நடத்தலாம்.  புதினம் தவறு என நிரூபிக்கவும் செய்யலாம். அதைவிடுத்து, போராட்டங்களும் மிரட்டல்களும் சரியெனத் தோன்றவில்லை. பாரதி ஒரு குறிப்பிட்ட சாதியினை (பெயரைச் சொல்லியே), மிகக் கடுமையாக விமரிசித்ததை நாடறியும். இன்னும் பல எழுத்தாளர்களும் இவரைப்போலவே எழுதியிருப்பார்கள்.

இது குறிப்பிட்ட எழுத்தாளருக்கெதிரான போராட்டமாகப் பார்ப்பதைவிட, எவரும் தங்களுக்கெதிராக எழுதிவிடக் கூடாது என்ற மனோபாவமாகத்தான் பார்க்கிறேன். இதனால் அவர் எழுதியது சரியென்று பொருளில்லை. சிந்தனைத்தளத்தின் மேல் தாக்குதல் தொடுக்கலாமா என்பதுதான் என் சந்தேகம். எல்லோரிடமும் சம்மதம் பெற்றுத்தான் எழுதியாக வேண்டும் என்றால், இனி புத்தகங்களே தேவையில்லை. சமுதாயத்தின் அறிவியலியக்கத்தை நிறுத்தி விடலாம். தர்க்கம் இல்லால் அறிவுத்தளம் இயங்கமுடியாது. தர்க்கத்தில் முடிவு எட்டியே ஆகவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அவரவர் வாதத்தை வைப்பதுதான் முதல் நோக்கம்.

இலக்கியம் எப்பொழுதும் முழு உண்மையைத்தான் பேசுகின்றன என்பது பொய். அது ஒரு பார்வை அவ்வளவே!

ஆளாளுக்கு அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டால், முதல் பலி, கருத்துக்கள்தான். அவ்விதம் நிகழ அனுமதித்துவிட்டால், அராஜகம் மட்டுமே நிலைக்கும்.

உங்களது கருத்துக்களை முற்றாக எதிர்க்கிறேன். அதைப் போன்றதொரு முட்டாள்தனமா, அபத்தமான, தீங்கான கருத்தினைக் கேட்டதேயில்லை. ஆனால் அம்மாதிரியான கருத்தினை சொல்லும் சுதந்திரம் உங்களுக்கு மறுக்கப்பட்டால், அச்சுதந்திரத்தைப் பெறுவதற்காக உங்களுடன் இனைந்து போராட நான் தயார் என ஒரு தொழிற்சங்கத் தலைவர் சொல்லுவார். அதுதான் சரி.

நான் சொல்லுவதை நீ ஏற்றுக்கொள். மீறினால் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பது சரியா? ஒரு எழுத்தாளன் என்பவர் தனிமனிதன். அவனுக்குப் பின்னால் சாதிய அமைப்புகள் அல்லது பிற அமைப்புகள் அணிதிரளும் சாத்தியக் கூறுகள் குறைவு.

இன்று அவர் சரண்டர் ஆகிவிட்டார். வென்றது யார்?  தோற்றது யார்?



2 comments:

  1. விமர்சனங்கள் குறித்த தெளிவான அலசல்
    அருமை

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. திரு பலராமன் சொல்வது போல் விமர்சனம் செய்ய உரிமை உண்டு ஆனால் அடிப்படை வேண்டும் . நம் உரிமை நம் விரல் முனை வரை , அடுத்தவன் மூக்கு வரை அல்ல ! சொல்லுங்கள் - பிறரை புண் படுத்தும் எதுவும் வேண்டாம் .

    அரசு

    ReplyDelete