Thursday, August 18, 2016

ஆதலினால் அன்பு செய்வீர்.

ரக்ஷா பந்தன். பந்தங்களை ரக்ஷிப்போம். அதாவது  உறவுகளைக் காப்போம். ஆனால் நடைமுறையில் எல்லாம் தலைகீழாக!!

எக்காலத்திலும் உறவுகட்கிடையே சச்சரவு கள் இருந்து கொண்டுதான் இருந்தன; ஆனால் ஒரு எல்லைக்குட்பட்டு.

இக்காலம் போன்று தன்வயிற்றைத்  தாண்டி எதையும் யோசிக்க இயலாத, ஈன சமூகமாய்  எப்படி மாறிப்போனோம் எனத் தெரியவில்லை. அனைவரிடத்தும் ஈகோ வியாபித்து, தலைவிரித்தாடுகிறது.

இப்போது போல, சண்டைக்கு அலையும் தினங்களைக் கண்டதில்லை.  காதில் விழும் வதந்திகளையும், உள்நோக்கத்தோடு  கூடிய பொய்யுரைகளையும் நம்பிக்  கொண்டு, விரோதித்துக் கொள்ள காத்திருக்கின்றனர்.

சகிப்புத் தன்மையும், பொறுமையும், அனுசரித்துச் செல்வதையும் மறந்து போன சமூகமாக மாறிப் போனோம்.  பெரியோர்களை அற்பமாக நடத்துவது அன்றாட நிகழ்வு.

இதைவிட பிறரது துயரத்தில் இன்பம் காணும்  அவலம்;

நன்றி மறப்பது குறித்து எவருக்கும் நாணமில்லை.

"..........உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு' என்பதைப் படித்திருந்தால் தானே?

தாய் மொழியை-அது போதிக்கும் நன்னெறிகனை   மறந்தோர் அனைத்தையும் இழந்தோர்  ஆவர்.

இந்தியக் கலாச்சாரம் குடும்பத்தைப் பேணும் கலாச்சாரம். குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட கலாச்சாரம்.  அதையே ஆட்டம் காண வைத்து விட்டோம் என்றால், நமது எண்ணிலடங்கா   ஆழமான புராண இதிகாசங்களிலிருந்து எதைக் கற்றுக் கொண்டோம் என விளங்க வில்லை.

வசதியில்லை  என்பதால், உறவுகட்கு  உதவாவிட்டாலும் பரவாயில்லை. அவர்களை நேசியுங்கள். குறைந்த பட்சம் அவர்களது துயரங்களைப் புரிந்து கொள்ளவாவது முயலுவோம்.

“அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே”
என்று மிக அழகாகப் பாடுகிறார் வள்ளலார். எங்காவது மலை கைப்பிடியில் அகப்படுமா? அன்பு என்னும் கைப்பிடியில் இறைவன் என்ற மலையும் அகப்படும் என்கிறார். குடிசையே ஆனாலும் அன்பிருக்குமானால் அரசனும் விரும்பி நுழைவான் என்கிறார்.

அன்பு நெடிய சாந்தமும் தயவுமுடையது; அன்பிற்கு பொறாமையில்லை;
அன்பு தன்னைத் தானே புகழாது;
இறுமாப்பாயிராது;
அயோக்கியமானதைச் செய்யாது; தற்பொழிவை நாடாது;
சினமடையாது;
தீங்கு நினையாது;
அநியாயத்தில் சந்தோஷப்படாமல் சத்தியத்தில் சந்தோஷப்படும்;
சகலத்தையும் தாங்கும்;
சகலத்தையும் விசுவாசிக்கும்,
சகலத்தையும் நம்பும்;
சகலத்தையும் சகிக்கும்.
அன்பு ஒருக்காலும் ஒழியாது.”

ஆதலினால் சொந்தபந்தங்களையாவது நேசிப்போம்.

ரக்ஷா பந்தன் கயிறு கட்டுவதில் இல்லை!

No comments:

Post a Comment