Saturday, May 13, 2017

காசிக்குப் போன சன்யாசி – பகுதி 3 (அயோத்தி)

அடுத்து சென்ற இடம் அயோத்தி.  அயோத்தியின் வரலாறும் அதன் பின்னனியும் யாவருக்கும் தெரிந்தது தானே? முதல் நாள் நகரின் மையத்தில் உள்ள பிர்லா மந்திரின் உள்ளே அவர்கள் கட்டிவைத்துள்ள விடுதியில் தங்கல்.

அயோத்தியின் காற்றில் கூட ராமாயணம் கலந்துவிட்டிருக்கும் போல. நகரெங்கும் ஏராளமான கோயில்கள். அவையாவும்,  ஏதோ ஒரு ராமாயண நிகழ்வுகளோடு சம்பந்தப்பட்டுள்ளன. எவ்வளவு கோயில்கள்? வால்மீகி, லவகுசா, திருமணத்திற்குப் பின் ராமர்-சீதை வசித்த இடம் என ஏராளமான நினைவிடங்கள்.  ஆரஞ்சு வண்ணத்தில் ஆஞ்சனேயர் கோயில்கள். பார்த்து மாளவில்லை.

இங்கே, ஒரு வொர்க் ஷாப் இருக்கிறது. அங்கே ராமர்ஜென்ம பூமியில் கோயில் கட்டுவதற்கான செதுக்கப்பட்ட தூண்களும், கற்களும், சிலைகளும் அடுக்கப் பட்டுள்ளன. கோர்ட் அனுமதித்தால் மூன்றே மாதத்தில், கோயில் கட்டிமுடித்துவிடுவார்கள் போல.

விடியற்காலை எழுந்து ‘சரயு’ நதியில் நீராடிவிட்டு, அறைக்குத் திரும்பி, ராமர் ஜென்ம பூமிக்கு செல்வதாகத் திட்டம்.
எவ்வளவு அரசியல் போராட்டங்களுக்கு வித்திட்ட இடம். பல அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட இடம்.  சர்வதேச அளவில் பேசப்படும் ஒரு இடம். அவ்விடத்திற்குச் செல்கிறோம் என்ற நினைவே, சில்லிட வைக்கிறது.  

கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ள இடம். துப்பாக்கி ஏந்திய காவலர்கள் ஏராளமாய். ஓரளவிற்குமேல் வாகனங்கள் செல்லவும் அனுமதியில்லை. காமிரா, மொபைல், எலக்ட்ரானிக் சாதனங்கள் எதற்கும் அனுமதியில்லை.  தின்பண்டங்கள் கூட அனுமதியில்லை.  ஐந்து அடுக்கு சோதனைக்கு, அனைவருமே உட்பட்டாக வேண்டும். அவ்வளவு முன்னெச்சரிக்கை. முதல் கேட்டிலிருந்து, ராமர் சிலைகள் வைக்கப் பட்டிருக்கும் இடத்திற்குச் செல்ல, கிட்டத்தட்ட , ஒரு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும். இரும்புக் கிராதிகள் கொண்டு எவரும் வேறு எங்கும் சென்றுவிடாதபடி வழியமைத்திருக்கிறார்கள். ராமர் சிலைகள் வைக்கப் பட்டிருக்கும் இடம்வரை செல்ல அனுமதிக்கிறார்கள். அந்த இடத்தில், ஒரு தாற்காலிக டெண்ட் போடப்பட்டு, அங்கேதான் சிலைகள் வைக்கப் பட்டுள்ளன.  ஒரு பண்டா தீர்த்தமும் பிரசாதமும் வழங்குகிறார்.

இந்த இடத்தில் இன்னும் எவ்வளவு இரத்தம் சிந்தப் படவேண்டுமோ தெரியவில்லை.

ராமரைத் தரிசித்துவிட்டு, இறுக்கமாகவே வெளிவர முடிகிறது.
ஆனால், உள்ளூர் மக்கள் இதுபற்றி அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. விரிவாகப் பேசாவிட்டாலும், அவர்கள் அமைதியையும் வியாபாரத்தையும் விரும்புகிறார்கள் என்பது புரிகிறது. 

Ayodhya, the Battle for India’s Soul.

















1 comment: